×

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த் திருவிழா: பல்லக்கில் நம்பெருமாள் வீதியுலா

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த் திருவிழாவையொட்டி நேற்று பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வீதியுலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுவதும், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் 11 நாட்கள் நடைபெறும் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்தார். இரவு நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை அடைந்தார்.

2ம் திருநாளான நேற்று காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து பல்லக்கில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து வழிநடை உபயங்கள் கண்டருளினார். வீதிகளில் திரளான பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர். பின்னர் கொடியாலம் சேஷாத்ரி அய்யங்கார் ஆஸ்தான மண்டபத்தை அடைந்தார். அங்கு மாலை 6.30 மணிக்கு கற்பக விருட்சம் வாகனத்தில் புறப்பாடு நடந்தது. இரவு 8.45 மணிக்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து வாகன மண்டபம் அடைந்தார். பின்னர் அங்கிருந்து இரவு 9.15 மணிக்கு கண்ணாடி அறை சேர்ந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 6ம் தேதி நடைபெறுகிறது. 8ம் தேதி ஆளும் பல்லக்குடன் விழா நிறைவடைகிறது.

The post ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த் திருவிழா: பல்லக்கில் நம்பெருமாள் வீதியுலா appeared first on Dinakaran.

Tags : Chitrai Theerth Festival ,Srirangam ,Ranganatha ,Temple ,Namperumal Veedhiula ,Pallak ,Namperumal Chitrai Streets ,Bhuloka Vaikundam ,Desams ,Srirangam Ranganathar Temple ,Srirangam Ranganathar Temple Chitrai Theerth Festival: ,Namperumal Vethiula at ,
× RELATED ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்...